தேவூர் அருகே பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி


தேவூர் அருகே பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி
x
தினத்தந்தி 22 Nov 2018 9:45 PM GMT (Updated: 22 Nov 2018 7:53 PM GMT)

தேவூர் அருகே பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேவூர், 

சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள காவேரிப்பட்டி ஊராட்சி வட்ராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 48), விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அன்னாத்தாள் (45). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் அன்னாத்தாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக அவரை எடப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கும் பலன் இல்லாததால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 21-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே நேற்று காலை 10 மணிக்கு அன்னாத்தாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த அவரது கணவர், மகள், மகன்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

பன்றிக்காய்ச்சலால் பெண் இறந்த சம்பவம் தேவூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு 15-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Next Story