மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: செங்கால் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு


மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: செங்கால் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 22 Nov 2018 11:22 PM GMT (Updated: 22 Nov 2018 11:22 PM GMT)

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன்காரணமக செங்கால் ஓடையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கல்குணம் தரைப்பாலம் உடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர்,

தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடித்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டமான கடலூரிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை.

இதற்கிடையில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்தது. இருந்தாலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் காலையில் தொடங்கிய மழை, விட்டு, விட்டு இரவு வரை பெய்தது. நேற்று காலையில் மழை ஓய்ந்த நிலையில் காலை 8 மணி அளவில் திடீரென மழை பெய்தது.

இந்த மழையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நனைந்தபடி சென்றனர். சிலர் குடைபிடித்தபடி நடந்து சென்றனர். இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீர் வடியவழியின்றி குட்டை போல் தேங்கி நின்றது. இதனால் குடியிருப்புவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக கடலூர் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக நேற்று 2-வது நாளாக தண்ணீர் கரைபுரண்டு சென்றதை காணமுடிந்தது. மேலும் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள கும்தான்மேடு தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் சென்றது.

இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை மற்றும் என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரும் அதிகமாக சென்றதால் குறிஞ்சிப்பாடி அருகே செங்கால் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் உடைந்தது. அதன் விவரம் வருமாறு:-

குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது கல்குணம் ஊராட்சி. இங்கிருந்து டி.வி.நல்லூருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை அவ்வழியாக செல்லும் செங்கால் ஓடையின் குறுக்கே செல்வதால் அங்கு தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஓடையில் மழைகாலங்களில் மழைநீரும், என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் செல்லும். தற்போது 2 நாட்களாக மழை பெய்து வந்ததாலும், சுரங்கத்தில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதாலும் இந்த செங்கால் ஓடையில் திடீரென நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் டி.வி.நல்லூர் செல்லும் தரைப்பாலம் நேற்று உடைந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தின் மற்ற பகுதிகளான வடக்குத்து, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, தொழுதூர், குப்பநத்தம், கீழசெருவாய், லக்கூர், வானமாதேவி, வேப்பூர், காட்டுமயிலூர், விருத்தாசலம், மே.மாத்தூர், பரங்கிப்பேட்டை, புவனகிரி, சேத்தியாத்தோப்பு உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

இருப்பினும் மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வடக்குத்தில் 91 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தில் சராசரியாக 24.76 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Next Story