பந்தலூரில்: குடிசை வீடுகளை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம்


பந்தலூரில்: குடிசை வீடுகளை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம்
x
தினத்தந்தி 25 Nov 2018 10:00 PM GMT (Updated: 25 Nov 2018 7:43 PM GMT)

பந்தலூரில் குடியிருப்பில் புகுந்த காட்டு யானை குடிசை வீடுகளை சேதப்படுத்தியது. இதனால் ஆதிவாசி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா சேரம்பாடி, சந்தனமாக்குன்னு, கண்ணம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் முகாமிடும் காட்டு யானைகள் தொழிலாளர்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்துவதுடன், விவசாய நிலங்களில் புகுந்து வாழை, தென்னை, பாக்கு மரங்கள் மற்றும் விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

சந்தனமாக்குன்னு ஆதிவாசி காலனியில் நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டு யானை ஒன்று பொம்மி, சந்திரன் ஆகியோரின் குடிசை வீடுகளை சேதப்படுத்தியது. இதனால் பீதியடைந்த ஆதிவாசிகள் சேரம்பாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் சின்னதம்பி, வனக்காப்பாளர் ராபர்ட் வில்சன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த காட்டு யானையை அங்கிருந்து விரட்டியடித்தனர். ஆனாலும் அந்த காட்டு யானை மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதால் ஆதிவாசி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

எனவே அந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story