ஓட்டேரியில் மது குடிக்க பணம் தேவைப்பட்டதால் வழிப்பறி; 2 பேர் கைது


ஓட்டேரியில் மது குடிக்க பணம் தேவைப்பட்டதால் வழிப்பறி; 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2018 10:30 PM GMT (Updated: 29 Nov 2018 8:25 PM GMT)

மதுகுடிக்க பணம் தேவைப்பட்டதால் 3 பேரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 27). இவர், கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் துப்புரவு பணி செய்து வருகிறார். இவர் ஓட்டேரி கந்தசாமி கோவிலில் சாமி கும்பிட சென்றார்.

அப்போது ஆட்டோவில் வந்த 3 பேர், இவரிடம் கத்தியை காட்டி மிரட்டியதுடன் அவரை தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.2,200 மற்றும் செல்போனை பறித்தனர். அந்த வழியாக வந்த வடமாநிலத்தை சேர்ந்த மேலும் 2 பேரையும் தாக்கி, அவர்களிடம் இருந்தும் ரூ.240 மற்றும் செல்போனை பறித்துச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வானமாமலை ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த இருதயராஜ் என்ற எத்திராஜ் (30) மற்றும் ஜான்சன் (38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்த னர்.விசாரணையில் இவர்கள், சம்பவத்தன்று காலை ஓட்டேரி கந்தசாமி கோவில் அருகே கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுபானத்தை வாங்கி குடிக்க சென்றனர். ஆனால் கூடுதலாக பணம் தேவைப்பட்டதால் மணிகண்டன் உள்பட 3 பேரையும் கத்தி முனையில் மிரட்டி, தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது.

அவர்களிடம் இருந்து கத்தி, ஆட்டோ, 2 செல்போன்கள் மற்றும் ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரையும் சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள இவர்களின் கூட்டாளியான வேப்பேரியை சேர்ந்த ஆடு என்ற பிரபுவை (28) தேடி வருகின்றனர்.

Next Story