தரங்கம்பாடி பகுதியில் கனமழை: 18-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


தரங்கம்பாடி பகுதியில் கனமழை: 18-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 29 Nov 2018 10:30 PM GMT (Updated: 29 Nov 2018 9:03 PM GMT)

தரங்கம்பாடி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 18-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

பொறையாறு,

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி ஏற்பட்ட கஜா புயலால் நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப் பட்டன. கஜா புயலால் மீனவர்களின் படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உப கரணங்கள் சேதமடைந் துள்ளன.

அதனை தொடர்ந்து தரங்கம்பாடி, சந்திரப்பாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோவில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்தநிலையில் தரங்கம்பாடி, பொறையாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. இந்த மழை விடாமல் நேற்றும் பெய்தது. மேலும், தரங்கம் பாடியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது.

தரங்கம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று 18-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கஜா புயல், கடல் சீற்றம் காரணமாக கடந்த பல நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. கஜா புயலால் படகு மற்றும் மீன்பிடி வலைகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து மீன்பிடிக்க செல்லாததால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு உடனே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story