காஷ்மீரில் மதுரை ராணுவ வீரர் மூச்சுத்திணறி பலி


காஷ்மீரில் மதுரை ராணுவ வீரர் மூச்சுத்திணறி பலி
x
தினத்தந்தி 1 Dec 2018 12:00 AM GMT (Updated: 30 Nov 2018 10:50 PM GMT)

காஷ்மீரில் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த ராணுவ வீரர் மூச்சுத்திணறி பலியானார்.

திருமங்கலம்,

மதுரையை அடுத்துள்ள திருமங்கலம் கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் 2003–ம் ஆண்டு ராணுவ வீரராக பணியில் சேர்ந்தார். காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் அவர் ஈடுபடுத்தப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு காஷ்மீரில் லே என்ற பகுதியில் சரவணனும் மற்றும் 3 வீரர்களும் தீவிரகண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு கடுமையான பனிப்பொழிவு இருந்தது. இதற்காக நிலக்கரியை குவித்து நெருப்பு மூட்டியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சரவணனுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் கரிசல்குளத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு நேற்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது. பணியின் போது உயிரிழந்த சரவணனின் உடல் ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.

சரவணனுக்கு பாண்டி மீனா(31) என்ற மனைவியும், 11 வயதில் அருந்ததிராய் என்ற மகளும் உள்ளனர். அருந்ததிராய் திருப்பரங்குன்றத்தில் உள்ள பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறாள்.

சரவணன் கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவில் குடும்பத்தினருடன் போனில் பேசியுள்ளார். அதற்கு அடுத்த சில மணி நேரத்திலேயே அவர் உயிரிழ்ந்த பரிதாபம் நேர்ந்தது. ராணுவ வீரர் சரவணன் பலியான சம்பவம் அவரது கிராமத்தினரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story