கஜா புயலில் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் 9 பேருக்கு நிவாரண உதவி அமைச்சர்கள் வழங்கினர்


கஜா புயலில் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் 9 பேருக்கு நிவாரண உதவி அமைச்சர்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 1 Dec 2018 10:30 PM GMT (Updated: 1 Dec 2018 7:08 PM GMT)

கஜா புயலினால் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் 9 பேருக்கு ரூ.1½ லட்சம் நிவாரண உதவியை அமைச்சர்கள் காமராஜ், உதயகுமார் ஆகியோர் வழங்கினர்.

திருவாரூர்,

திருவாரூர் பஸ் நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் 178 மருத்துவ குழுக்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குளோரினேசன் மேற்கொள்ள 50 குழுக்கள், ஈக்கள், கொசுக்கள் ஒழிக்க 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதை அமைச்சர்கள் ஆர்.காமராஜ், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். இதை தொடர்ந்து, புகை அடிப்பான், விழிப்புணர்வு ஒலிபெருக்கி உள்ளிட்டவைகளை சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு அமைச்சர்கள் வழங்கினர்.

தொடர்ந்து உதவி கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயலினால் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் 9 பேருக்கு நிவாரணமாக ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்திற்கான மின்னணு பரிமாற்ற ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர். பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உயிரிழப்புகள் தவிர்ப்பு

தமிழக அரசு புயல் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் பல்வேறு உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 573 வருவாய் கிராமங்களில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து பயிர்கள், தென்னை மரங்கள், கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண தொகைகள் மின்னணு பரிமாற்ற ஆணை மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

பயிர்க்காப்பீட்டை பொறுத்தவரை கடந்த ஆண்டு என்ன இலக்கு இருந்ததோ, அதே இலக்கு இந்த ஆண்டும் எட்டப்பட்டுள்ளது. கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் உடனடி சீரமைப்பிற்காக ரூ.1,500 கோடியும், நீண்டகால சீரமைப்பு பணிகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடியும் மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, உதவி கலெக்டர் முருகதாஸ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஸ்டன்லி மைக்கேல், நகராட்சி ஆணையர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story