4-ந் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.-தோழமை கட்சியினர் ஆலோசனை


4-ந் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.-தோழமை கட்சியினர் ஆலோசனை
x
தினத்தந்தி 1 Dec 2018 11:00 PM GMT (Updated: 1 Dec 2018 9:59 PM GMT)

மேகதாது அணை பிரச்சினையையொட்டி திருச்சியில் 4-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சியினர் ஆலோசனை கூட்டம் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

மலைக்கோட்டை,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்து, திருச்சியில் வருகிற 4-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சியினர் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

அதற்காக திருச்சி தென்னூர் உழவர்சந்தை திடலில் ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தி, மேகதாது அணை பிரச்சினையில் வெற்றி பெறுவது தொடர்பாக திருச்சி மாவட்ட தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட தி.மு.க. தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது. திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

கூட்டத்தில் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கலைச்செல்வன், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் மாவட்ட செயலாளர் சேரன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் திராவிட மணி, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் அருள், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில துணை செயலாளர் வெங்கடேஷ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட தி.மு.க. தோழமை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசியவர்கள், மேகதாது அணை பிரச்சினையில் மத்திய அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் போராட்டம் இருக்க வேண்டும் என்றும், மோடி அரசையும், தமிழக அரசையும் வீட்டுக்கு அனுப்பும் வகையில் போராட்டம் அமைய வேண்டும் எனவும், திரளாக கட்சியினரை பங்கேற்க செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து பேசினர்.

பின்னர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேசுகையில், “மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி வழங்க கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அவற்றையெல்லாம் மத்திய பாரதீய ஜனதா அரசு பொருட்படுத்தவில்லை. இந்த அராஜக போக்கை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வின் பல்வேறு அணியினர், தொண்டர்கள், கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்” என்றார்.

Next Story