கேபிள் வயர்களை சீரமைத்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி


கேபிள் வயர்களை சீரமைத்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி
x
தினத்தந்தி 2 Dec 2018 10:45 PM GMT (Updated: 2 Dec 2018 8:19 PM GMT)

கஜா புயலால் சேதமடைந்த கேபிள் வயர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பெரியதெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40). இவர் அதே பகுதியில் உள்ள கேபிள் ஆபரேட்டரிடம் கேபிள் வயர்களை சரிசெய்யும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி சண்முகவள்ளி என்ற மனைவியும், ராகேஸ்வரன், வசந்த் என்ற மகன்களும், மகதி என்ற மகளும் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களாக கஜா புயலால் சேதமடைந்த கேபிள் வயர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

வழக்கம்போல் இவர் நேற்று காலையில் புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கேபிள் வயரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கேபிள் வயர் எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற மின்கம்பி மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி ஜெயக்குமார் இறந்தது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஜா புயலால் சேதமடைந்த கேபிள் வயர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டபோது ஜெயக்குமார் மின்சாரம் பாய்ந்து இறந்ததால், அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயக்குமாரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story