துணை சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை


துணை சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 Dec 2018 10:30 PM GMT (Updated: 3 Dec 2018 7:00 PM GMT)

துணை சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் தண்டுமேடு, அழிஞ்சிவாக்கம் கிராமங்களுக்கு இடையே பொதுவான இடமான ஸ்ரீராம் நகரில் துணை சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி நேற்று புரட்சிபாரதம் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சி.பி.குமார் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு அருகே தண்டுமேடு என்ற கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

இது எங்கள் கிராமத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எங்கள் பகுதியை சேர்ந்த முதியவர்கள், கர்ப்பிணிகள் அவ்வளவு தூரம் சென்றுவர சிரமப்படுவோம்.

எனவே தண்டுமேடு, அழிஞ்சிவாக்கம் கிராமங்களுக்கு இடையே பொதுவான இடமான ஸ்ரீராம் நகரில் இந்த துணை சுகாதார நிலையத்தை கட்டினால் 3 கிராம மக்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

எனவே தண்டுமேடு கிராமத்தில் கட்டப்பட உள்ள துணை சுகாதார நிலையத்தை இடம்மாற்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஸ்ரீராம்நகரில் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story