திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நோய் தாக்கிய வெங்காய செடிகளுடன் விவசாயிகள் போராட்டம்


திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நோய் தாக்கிய வெங்காய செடிகளுடன் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2018 11:00 PM GMT (Updated: 3 Dec 2018 8:02 PM GMT)

திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் நோய் தாக்கிய வெங்காய செடிகளுடன் வந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு துறையூர் தாலுகா நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நோய் தாக்குதலால் சேதம் அடைந்த சின்ன வெங்காயம் செடிகளுடன் நேற்று வந்தனர். அவர்கள் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாசல் அருகில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் அங்கு வந்து போராட்டம் நடத்திய விவசாயிகளை அழைத்து பேசினார்கள். அப்போது அவர்கள் அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

நரசிங்கபுரம் பகுதியில் சுமார் 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த சின்ன வெங்காய செடிகள் எல்லாம் ஒரு விதமான நோயினால் பாதிக்கப்பட்டு அழிந்து போய் விட்டன. எத்தனை கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கணக்கெடுக்க வேண்டும். சின்ன வெங்காயம் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை வங்கிகளில் கடன் வாங்கி செலவிட்டு இருக்கிறறோம். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் ஆவன செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Next Story