பரங்கிப்பேட்டை அருகே விபரீதம்: வீட்டில் பிரசவம் பார்த்ததால் தாய்- குழந்தை சாவு - சப்-கலெக்டர் விசாரணை


பரங்கிப்பேட்டை அருகே விபரீதம்: வீட்டில் பிரசவம் பார்த்ததால் தாய்- குழந்தை சாவு - சப்-கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 4 Dec 2018 10:45 PM GMT (Updated: 4 Dec 2018 5:51 PM GMT)

பரங்கிப்பேட்டை அருகே வீட்டில் பிரசவம் பார்த்ததால் தாய், குழந்தை உயிரிழந்தனர். இதுதொடர்பாக சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை அருகே உள்ள சக்கரபள்ளி மண்டபத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 30). தொழிலாளி. இவருடைய மனைவி கோமதி(26). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கோமதி மீண்டும் கர்ப்பமானார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கோமதிக்கு கடந்த 2-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே உறவினர்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது குழந்தை இறந்தே பிறந்தது. இதனை தொடர்ந்து குழந்தையை, வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் உறவினர்கள் புதைத்தனர்.

வீட்டில் பிரசவம் நடந்ததால் கோமதிக்கு அதிகளவு ரத்தப்போக்கு இருந்தது. மேலும் அவர் உடல் சோர்வுடன் காணப்பட்டார். இதனை தொடர்ந்து அவரை, சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், பிறந்த குழந்தை எங்கே என்று கேட்டனர். அதற்கு கோமதி, வீட்டில் குழந்தை இறந்தே பிறந்ததாகவும், போலீசுக்கு தெரியாமல் உடலை வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் புதைத்து விட்டதாகவும் கூறினார்.

உடனடியாக கோமதிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக் கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோமதி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சக்கரபள்ளி மண்டபத்துக்கு விரைந்து சென்று கோமதியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் வீட்டின் பின்புற தோட்டத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல், தோண்டி எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குழந்தை மற்றும் கோமதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக அரியகோஷ்டி கிராம நிர்வாக அலுவலர் வாசுதேவன் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் சப்-கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார். வீட்டில் பிரசவம் பார்த்ததால் சிசு மற்றும் தாய் இறந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

Next Story