ரெயில்கள் 2–வது நாளாக மண்டபத்துடன் நிறுத்தம்: பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் ராமேசுவரம் பயணிகள் அவதி


ரெயில்கள் 2–வது நாளாக மண்டபத்துடன் நிறுத்தம்: பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் ராமேசுவரம் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 5 Dec 2018 10:45 PM GMT (Updated: 5 Dec 2018 7:58 PM GMT)

பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் விழுந்த விரிசலால் 2–வது நாளாக நேற்றும் மண்டபத்துடன் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் ராமேசுவரம் செல்ல இருந்த பயணிகள் அவதி அடைந்தனர். மீண்டும் எப்போது ரெயில் சேவை தொடங்கும் என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை மண்டபத்துடன் இணைக்கும் பாம்பன் ரெயில் பாலத்தில் அனைத்து ரெயில்களும் 20 கிலோ மீட்டர் வேகத்தின்தான் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தூக்கு பாலத்தின் மையப்பகுதியில் இணைப்பு கம்பிகளில் திடீரென பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

இதன் காரணமாக நேற்று முன்தினம் ராமேசுவரம்–மண்டபம் இடையே ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து வந்த ரெயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்து மறுமார்க்கத்தில் மீண்டும் இயக்கப்பட்டன. நேற்று காலையில் 2–வது நாளாக ராமேசுவரம் வந்த சென்னை ரெயில்களும் அங்கேயே நிறுத்தப்பட்டன.

ரெயில்வே அதிகாரிகள் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து நேற்று தென்னக ரெயில்வே பாலங்களின் பராமரிப்பு தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு பாம்பன் ரெயில் பாலத்திற்கு வந்து பார்வையிட்டார்.

சுமார் 2 மணி நேர ஆய்வுக்கு பின்னர் மண்டபத்தில் இருந்து ரெயில் என்ஜினை மட்டும் கொண்டு வந்து, 5 கிலோ மீட்டர் வேகத்தில் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தார்கள். பின்னர் பாம்பனில் இருந்து 15 கிலோ மீட்டர் வேகத்தில் மீண்டும் அந்த என்ஜினை பாலத்தில் இயக்கினர்.

பாலம் பழுதால் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டிகளில் என்ஜினை பொருத்தி, மெதுவாக பாம்பன் ரெயில்பாலம் வழியாக இயக்கப்பட்டு, மானாமதுரைக்கு கொண்டு வந்தனர். இவ்வாறு சோதனை நடைபெற்றாலும் நேற்று முழுவதும் ராமேசுவரத்துக்கு பயணிகளுக்கான ரெயில் சேவை எதுவும் நடைபெறவில்லை.

இதுகுறித்து தென்னக ரெயில்வே பாலங்களின் பராமரிப்பு தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு கூறியதாவது:–

பாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல்கள் சரி செய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும் அதன் உறுதி தன்மையை கருவி மூலம் ஆய்வு செய்வதற்காக சிறப்பு அதிகாரிகள் வர உள்ளனர். அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னர்தான் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும். தற்போது இந்த தூக்குப்பாலத்தில் ரெயில்கள் இயக்கப்படமாட்டாது.

ராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும். இதேபோல மறு மார்க்கத்தில் இருந்து வரும் ரெயில்களும் மண்டபத்துடன் நிறுத்தப்படும். இங்கு புதிய ரெயில் பாலம் கட்டுவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து வழக்கமான நேரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. ராமேசுவரத்துக்கு ரெயில்களில் வரும் பயணிகள், மண்டபம் வந்து அதன் பின்னர் சிறப்பு பஸ் வசதி மூலம் ராமேசுவரத்துக்கு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவதி அடைந்தனர். ராமேசுவரத்துக்கு ரெயில்கள் இயக்கப்படும் வரை பயணிகள் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story