சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதித்த 26 மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி பேட்டி


சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதித்த 26 மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி பேட்டி
x
தினத்தந்தி 6 Dec 2018 11:00 PM GMT (Updated: 6 Dec 2018 5:45 PM GMT)

மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்த 26 மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கூறினார்.

நாமக்கல், 

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

பொதுப்பணித்துறை அரசு மணல் குவாரிகளை இயக்குவதில் படுதோல்வி அடைந்து விட்டது. தனியார் மணல் குவாரியை இயக்கியபோது சில முறைகேடுகள் நடைபெற்றது உண்மைதான். ஆனால் அரசே நேரடியாக இயக்கினால் இணையதளம் மூலம் குறைந்த விலைக்கு மணல் கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். நாங்கள் அதை வரவேற்றோம்.

ஆனால் முதல்-அமைச்சர் அறிவித்து 2 மாதங்கள் மட்டுமே இணையதளம் மூலம் மணல் குவாரிகளில் மணல் வழங்கப்பட்டது. தனியார் மணல் குவாரி நடத்திய போது தினசரி 20 ஆயிரம் லோடு வழங்கினார்கள். கட்டுமான பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வந்தன. ஆனால் தற்போது நாமக்கல் மாவட்டம் குமரிபாளையம் என்ற இடத்தில் மட்டும் தான் ஒரே ஒரு அரசு மணல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தினசரி 30 ஆயிரம் லோடு மணல் தேவை. ஒரே ஒரு குவாரி மட்டும் இயக்கப்படுவதால் கட்டுமான பணிகள் முடங்கி உள்ளது.

இணையதளம் மூலம் பதிவு செய்து சுமார் 55 ஆயிரம் லாரி உரிமையாளர்கள் 5 மாதங்களாக காத்திருக்கின்றனர். இதனால் லாரி உரிமையாளர்கள் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. மேலும் தட்டுப்பாடு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருட்டுத்தனமாக நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் எடுத்து கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு கடத்தி, அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழகம் முழுவதும் 26 மணல் குவாரிகளை இயக்குவதற்கு அனுமதி கொடுத்தும், தமிழக அரசு மணல் குவாரி இயக்குவதற்கு ஆர்வம் காட்டாமல் மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்து வருகிறது. ஆனால் மலேசியாவில் இருந்து வரும் மணல் விலை அதிகம் என்பதால், அவற்றை வாங்குவதற்கு பயனாளிகள் ஆர்வம் காட்டவில்லை.

எனவே தமிழக அரசு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையமும், தேசிய பசுமை தீர்ப்பாயமும் அனுமதி அளித்து உள்ள 26 மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் ஏறத்தாழ 300 செயற்கை மணல் (எம்.சாண்ட்) நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 50 நிறுவனங்கள் மட்டுமே முறையாக தர கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்று விற்பனை செய்கிறார்கள். ஏறத்தாழ 250 செயற்கை மணல் நிறுவனங்கள் போலியாக பொதுப்பணித்துறையினரின் சான்றிதழ் பெறாமல் அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.

எனவே தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறையிடம் தரச்சான்றிதழ் பெறாமல் இயங்கி வரும் தரமற்ற செயற்கை மணல் உற்பத்தி நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். அவற்றின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story