குடிநீர்-மின்சாரம் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர்-மின்சாரம் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:45 PM GMT (Updated: 6 Dec 2018 6:45 PM GMT)

மேலதுளசேந்திரபுரம், காக்கையாடியில் குடிநீர்- மின்சாரம் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலதுளசேந்திரபுரம் கிராமத்தில் கஜா புயல் பாதித்து 20 நாட்களை கடந்தும் குடிநீர், மின்சாரம் இன்னும் வழங்கவில்லை. இந்தநிலையில் குடிநீர், மின்சாரம் வழங்கக்கோரி நேற்று கிராமமக்கள் காலிக்குடங்களுடன் மேலதுளசேந்திரபுரத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கிராமமக்கள் கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி- மதுக்கூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூத்தாநல்லூர் அருகே உள்ள காக்கையாடி கிராம பகுதியில் புயலால் சாய்ந்த மின்கம்பங்களை விரைவாக சீரமைத்து மின்சாரம் வழங்கக்கோரி நேற்று காக்கையாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பழையனூரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் வடபாதிமங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் மின்சாரம் சீரமைக்கும் பணிகள் ஏற்கனவே நடந்து கொண்டு இருப்பதாகவும், சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் தாமதமின்றி வழங்கப்படும் என்று கூறினர்.

இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கூத்தாநல்லூர்- வடபாதிமங்கலம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story