திருவாரூரில் ஆற்றில் குளித்த போது சேற்றில் சிக்கி கொத்தனார் சாவு போலீசார் விசாரணை


திருவாரூரில் ஆற்றில் குளித்த போது சேற்றில் சிக்கி கொத்தனார் சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 Dec 2018 10:15 PM GMT (Updated: 6 Dec 2018 6:52 PM GMT)

திருவாரூரில் ஆற்றில் குளித்த போது சேற்றில் சிக்கி கொத்தனார் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்,

திருச்சி அரியமங்கலம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் செல்வம் (வயது 38). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர், திருச்சியில் இருந்து லாரி ஒன்றில் மணல் இறக்க திருவாரூர் வந்துள்ளார். மணலை இறக்கி விட்டு செல்லும் வழியில் திருவாரூர் கல்பாலம் என்ற இடத்தில் உள்ள ஓடம்போக்கியாற்றில் குளிக்க சென்றார். அப்போது அவர் சேற்றில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளார்.

இதனை கண்ட லாரி டிரைவர் செந்தில்குமார் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே செல்வம் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து செந்தில்குமார் திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story