பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க கோரி விமான நிலையத்தை முற்றுகையிட வந்த 223 பேர் கைது


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க கோரி விமான நிலையத்தை முற்றுகையிட வந்த 223 பேர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2018 11:00 PM GMT (Updated: 6 Dec 2018 6:56 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க கோரி திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வந்த மனித நேய ஜனநாயக கட்சியினர் 223 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு சட்டத்தின் அடிப்படையில் விரைவாக தீர்ப்பு வழங்கவேண்டும், மீண்டும் மசூதி கட்ட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி டிசம்பர் 6-ந்தேதி திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மனித நேய ஜனநாயக கட்சியினர் அறிவித்து இருந்தனர்.

இதனையொட்டி அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க திருச்சி விமான நிலைய வளாகத்தில் நேற்று காலையில் இருந்தே கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். விமான நிலையத்தின் பிரதான வாசலில் தடுப்பு வேலி அமைத்து உள்ளே செல்பவர்களை சோதனை செய்து அனுப்பினார்கள். 2 உதவி போலீஸ் கமிஷனர்கள் தலைமையில் திருச்சி மாநகர போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மனித நேய ஜனநாயக கட்சியினர் விமான நிலையத்திற்கு நேர் எதிரே வயர்லஸ் சாலையில் கூடி நின்றனர். அக்கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளர் ரிபாயி தலைமையில் கண்டன கூட்டம் நடத்தினார்கள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு விமான நிலையத்தை முற்றுகையிடுவதற்காக வந்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மாநில நிர்வாகிகள் நாகை முபாரக், இப்ராகிம்ஷா, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் அஷ்ரப் அலி, ஷேக் இஸ்மாயில், சீனி ஜெகபர், ஜகாங்கீர் உள்பட 223 பேரை போலீசார் கைது செய்து 3 வாகனங்களில் ஏற்றி சென்றனர்.

Next Story