அந்தியூர் அருகே வெவ்வேறு சம்பவம்: விஷம் குடித்து 2 பேர் தற்கொலை

அந்தியூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் ரெட்டியபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 47). விவசாயி. இவருடைய மனைவி விஜயலட்சுமி (34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஜெயக்குமார் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை ஜெயக்குமார் எடுத்து குடித்தார். இதில் அவர் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் செல்லும் வழியிலேயே ஜெயக்குமார் இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் அந்தியூர் அருகே இன்னொருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் விவரம் வருமாறு:-
அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (30). தொழிலாளி. இவருடைய மனைவி கோமதி (25). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்தநிலையில் சக்திவேலுக்கும், கோமதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்த சக்திவேல் நேற்று முன்தினம் விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் கொண்டு செல்லும் வழியிலேயே சக்திவேல் இறந்தார்.
இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story