திருநங்கை காவலர் தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய மாதர் சங்கம் மனு


திருநங்கை காவலர் தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய மாதர் சங்கம் மனு
x
தினத்தந்தி 6 Dec 2018 11:06 PM GMT (Updated: 6 Dec 2018 11:06 PM GMT)

திருநங்கை காவலர் தற்கொலை முயற்சி தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மாதர் சங்கம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்து உள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த திருநங்கை காவலர் நஸ்ரியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின்னர் உயிர்பிழைத்து தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் பொன்னுத்தாய் தலைமையில் மாவட்ட தலைவர் வடகொரியா, மாவட்ட செயலாளர் கண்ணகி உள்ளிட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், திருநங்கை காவலர் நஸ்ரியா தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பாகவும், அதற்கு காரணமானவர்கள் என்று திருநங்கை நஸ்ரியா தெரிவித்த 3 காவல் துறை அதிகாரிகள் மீதும் உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளதாகவும், விசாரணை அறிக்கையின் முடிவில் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

Next Story