துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.31 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல் விமான நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது


துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.31 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல் விமான நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2018 10:45 PM GMT (Updated: 7 Dec 2018 7:05 PM GMT)

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.31 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தனியார் விமான நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நடைமேடை, குடியுரிமை பகுதி, சுங்க பகுதிகளில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

துபாயில் இருந்து ஒரு விமானம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகள் குடியுரிமை சோதனையை முடித்து கொண்டு சுங்க பகுதிக்கு வந்தனர். அப்போது தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரான சென்னையை சேர்ந்த முரளி (வயது 32) சுங்க பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்றார்.

நீண்ட நேரத்துக்கு பின் கழிவறையில் இருந்து முரளி வெளியே வந்ததால் சந்தேகத்தின் பேரில் அவரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக அவர் பேசியதால் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 973 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் துபாய் விமானத்தில் வந்த பயணி ஒருவர் அதை தன்னிடம் கொடுத்து, வெளியே கொண்டு வந்து தர வேண்டும் என்று கூறியதுடன், அந்த பயணியையும் முரளி அடையாளம் காட்டினார். உடனே அந்த பயணியை அதிகாரிகள் பிடித்து விசாரித்தபோது அவர் சென்னையை சேர்ந்த ரகுமான்கான் (29) என தெரியவந்தது.

அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது 27 கிராம் சிறிய தங்க கட்டியும், 15 வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளும் இருந்தன. ஏற்கனவே கைப்பற்றப்பட்ட 973 கிராம் தங்க கட்டிகள், தற்போது கைப்பற்றிய 27 கிராம் தங்க கட்டி என ரூ.31 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்க கட்டிகளையும், ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பெட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பயணி ரகுமான்கான், அவருக்கு உதவிய தனியார் விமான நிறுவன ஊழியர் முரளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story