குடிநீர், மின்சாரம், நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு வாக்குவாதம்


குடிநீர், மின்சாரம், நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு வாக்குவாதம்
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 8:33 PM GMT)

கறம்பக்குடி அருகே குடிநீர், மின்சாரம், நிவாரணம் கேட்டு 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஆத்தங்கரை விடுதி ஊராட்சி பகுதியில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். புயல் தாக்குதலுக்கு பிறகு இந்த பகுதிக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்பட வில்லை. குடிநீர் வினியோகம் முறையாக செய்யப் படவில்லை. மேலும் நிவாரணம் கணக்கெடுப்பும் முறையாக நடத்தப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை குனப்பன்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ. ஆறுமுகத்தின் காரை முற்றுகையிட்டு அவருடன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியை யாரும் கண்டு கொள்ளவில்லை எனவும், குடிநீர், நிவாரண பொருட்கள் வழங்கப்பட வில்லை எனவும் குற்றம் சாட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல் மற்றும் கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் அம்புக் கோவில் ஊராட்சியில் 24 குடும்பத்தினருக்கு மட்டும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல் கடுக்காகாடு கிராமத்தில் மின்சாரம், குடிநீர் மற்றும் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் வெட்டன்விடுதியில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தாசில்தார் சக்திவேல், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

கறம்பக்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் அனைத்து பகுதி மக்களுக்கும் முழுமையாக நிவாரணம் வழங்க கோரியும், வீடுகளை இழந்தவர்களுக்கு, வீடு கட்டி தர வலியுறுத்தியும் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார் சக்திவேலிடம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story