தமிழக எல்லைப்பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை அமோகம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


தமிழக எல்லைப்பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை அமோகம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:45 PM GMT (Updated: 8 Dec 2018 9:31 PM GMT)

தமிழக எல்லைப்பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியாக தமிழக-கேரள எல்லையில் குமுளி உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது.

குறைந்த விலைக்கு கிடைப்பதாலும், போதை வெளியே தெரியாது என்பதாலும் கூலித் தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் அவற்றை வாங்கி பயன்படுத்தி போதைக்கு அடிமையாகின்றனர். புகையிலை புற்றுநோய் வர காரணம் என்று தெரிந்திருந்தும் அதன் விற்பனை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதேபோல் அண்டை மாநிலமான கேரளாவிலும் போதைப்பாக்கும், புகையிலையும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி விற்பனை செய்வது தெரிந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி தமிழக எல்லைப்பகுதியில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்துகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சுகாதாரத்துறை மற்றும் போலீசாரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



Next Story