அஞ்சுகிராமம் அருகே குளத்தில் வடமாநில வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை


அஞ்சுகிராமம் அருகே குளத்தில் வடமாநில வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 9 Dec 2018 10:15 PM GMT (Updated: 9 Dec 2018 2:51 PM GMT)

அஞ்சுகிராமம் அருகே குளத்தில் வடமாநில வாலிபர் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே மயிலாடி ஒசரவிளையில் ஒரு குளம்  உள்ளது. இந்த குளத்தில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பது வழக்கம். நேற்று காலையில் குளிக்க சென்றவர்கள் தண்ணீரில் ஒரு வாலிபரின் பிணம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த கன்னியாகுமரி உதவி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் குளத்தில் கிடந்த வாலிபரின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பிணமாக கிடந்தவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவருக்கு சுமார்         35 வயது     இருக் கும். அவரது உடலில் சில காயங்களும் இருந்தன. பிணமாக கிடந்தவர் நேற்று முன்தினம் அந்த  பகுதியில் சுற்றி வந்ததை பார்த்ததாக பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், பிணத்தை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணமாக கிடந்தவர் யார்? அவரை யாராவது கொலை செய்து குளத்தில் வீசினார்களா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story