அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயிர்களை காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யலாம் கலெக்டர் தகவல்


அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயிர்களை காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 Dec 2018 11:00 PM GMT (Updated: 9 Dec 2018 7:44 PM GMT)

அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயிர்களை பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

அரியலூர்,

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாப்பாகவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், 2018-19-ம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தில் ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் கீழ்க்கண்ட வேளாண்மை பயிர்களுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் பிரிமீயம் தொகையாக ஏக்கருக்கு நெல் பயிருக்கு ரூ.443-ம், மக்காச்சோளத்திற்கு ரூ.304-ம், உளுந்துக்கு ரூ.214-ம், நிலக்கடலைக்கு ரூ.374-ம், சோளத்திற்கு ரூ.147-ம், எள்ளுக்கு ரூ.180-ம், பருத்திக்கு ரூ.1,240-ம், கரும்புக்கு ரூ.1,696-ம் செலுத்தி பயன் பெறலாம். பிரிமீயம் செலுத்துவதற்கு நெல்லுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதியும், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, சோளம் ஆகிய பயிர்களுக்கு வருகிற ஜனவரி மாதம் 15-ந்தேதியும், பருத்திக்கு வருகிற பிப்ரவரி மாதம் 28-ந் தேதியும், கரும்புக்கு வருகிற அக்டோபர் 31-ந் தேதியும் கடைசி நாளாகும்.

இந்த திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள் வங்கிகளில், தொடக்க வேளாண் கூட்டுறவுகடன் சங்கங்களில் கட்டாயமாகப் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள், அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ தங்களது விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

பயிர் காப்பீட்டு தொகையில், விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. விவசாயிகள் இந்த திட்டத்தின்கீழ் பதிவுசெய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டண தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம். எனவே, விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு தொகை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story