துறையூர் அருகே கொத்தனார் கழுத்தை நெரித்து கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


துறையூர் அருகே கொத்தனார் கழுத்தை நெரித்து கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Dec 2018 11:00 PM GMT (Updated: 10 Dec 2018 9:08 PM GMT)

துறையூர் அருகே கொத்தனாரை கழுத்தை நெரித்து கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

துறையூர்,

துறையூரை அடுத்த புலிவலம் அருகே உள்ள திண்ணனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் ராஜசேகர் (வயது 32), கொத்தனார். இவரது மனைவி வனரோஜா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக வனரோஜா கணவரை பிரிந்து மண்ணச்சநல்லூரில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இதனால் ராஜசேகர் திண்ணனூரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் கரட்டாம்பட்டி அருகில் உள்ள கூச்சிகரடு மலையடிவாரத்தில் காட்டுபகுதியில் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த பகுதியினர் புலவலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்னன், மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் இமானுவேல்ராயப்பன், புலிவலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலேந்திரன், ஜாகீர்கான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கழுத்தை நெரித்து...

ராஜசேகர் கல்லால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பிணத்தின் அருகே மதுபாட்டில்கள் கிடந்தன. யாரோ மர்மநபர்கள் மது வாங்கி கொடுத்து அவரை கொலை செய்திருந்தது முதல்கட்ட விசாரணயில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக புலவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகர் பெண் சகவாசம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story