பதவி ஏற்று 6 மாதங்கள் ஆகியும் விவசாய கடனை குமாரசாமி தள்ளுபடி செய்யவில்லை


பதவி ஏற்று 6 மாதங்கள் ஆகியும் விவசாய கடனை குமாரசாமி தள்ளுபடி செய்யவில்லை
x
தினத்தந்தி 10 Dec 2018 11:00 PM GMT (Updated: 10 Dec 2018 9:47 PM GMT)

பதவி ஏற்று 6 மாதங்கள் ஆகியும் விவசாய கடனை குமாரசாமி தள்ளுபடி செய்யவில்லை என்று பெலகாவியில் பா.ஜனதா சார்பில் நடந்த விவசாய மாநாட்டில் எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

பெலகாவி,

கர்நாடகத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடக பா.ஜனதா விவசாய அணி சார்பில் விவசாயிகள் மாநாடு பெலகாவி சுவர்ண சவுதா அருகே நேற்று நடைபெற்றது.

அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், மூத்த தலைவர் கே.எஸ்.ஈசுவரப்பா, முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக், ஷோபா எம்.பி., ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. உள்பட கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இதில் எடியூரப்பா பேசியதாவது:-

முதல்-மந்திரி ஆன 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகியும் இன்னும் விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை. இந்த அரசு விவசாயிகள் விரோத அரசு.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மாநில அரசு நிறைவேற்ற தவறிவிட்டது. குமாரசாமி முதல்-மந்திரி ஆகி இருப்பது, நெல் நாற்று நடுவதற்கும், அதை அறுவடை செய்வதற்கும் அல்ல. விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் இல்லாவிட்டால் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

நமது நாட்டின் வரலாற்றில் ஒரு முதல்-மந்திரி, நட்சத்திர ஓட்டலில் உட்கார்ந்து கொண்டு, அரசு அதிகாரிகள் பணி இடமாற்றத்தில் ஈடுபட்டதும், ஆட்சி நிர்வாகத்தை நடத்தியதும் இல்லை. நான் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் முதல்-மந்திரி என்று குமாரசாமி சொல்கிறார். இது வெட்கக்கேடானது.

விதான சவுதா கட்டிடம் இருக்கும்போது, எதற்காக நட்சத்திர ஓட்டலில் நிர்வாகத்தை நடத்த வேண்டும்?.

கர்நாடகத்தில் ஆட்சி நிர்வாகம் நடக்கிறதா? என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்யவில்லை. மக்களின் பிரச்சினைகளை கேட்கவில்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் அந்த பயன் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.

முதல்-மந்திரியின் சொந்த தொகுதியிலேயே விவசாயிகளுக்கு வங்கிகள் நோட்டீஸ் அனுப்புகின்றன. இதை பற்றி பேசினால், குமாரசாமி விமர்சிக்கிறார். மாநிலத்தில் 100-க்கும் அதிகமான தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. எந்த மந்திரியும் வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை. விவசாய கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

Next Story