‘எங்களுக்குள் பிளவு இல்லை’ வைகோ, திருமாவளவன் கூட்டாக பேட்டி


‘எங்களுக்குள் பிளவு இல்லை’ வைகோ, திருமாவளவன் கூட்டாக பேட்டி
x
தினத்தந்தி 11 Dec 2018 11:30 PM GMT (Updated: 11 Dec 2018 7:49 PM GMT)

‘எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை’ என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

பூந்தமல்லி,

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாயின. இரு கட்சி தலைவர்களும் தொண்டர்களை சமாதானப்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டனர்.

இந்த நிலையில் இரண்டு கட்சிகள் குறித்து வெளியான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடந்தது.

இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறும்போது, ‘‘திருமாவளவன் எனது தம்பி. நானும் அவரும் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். சில நாட்களாக எனக்கும், திருமாவளவனுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டதாக தவறான தகவல் பரவியது. எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை. இதுபற்றி நாங்கள் இருவரும் தகுந்த விளக்கம் கொடுத்துள்ளோம். எந்த நிலையிலும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதில் பிளவு ஏற்படாது. வருகிற இடைத்தேர்தலில் தி.மு.க. தான் வெற்றிபெறும்’’ என்றார்.

5 மாநில தேர்தல் முடிவு குறித்து வைகோ கூறும்போது ‘இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மதச்சார்பின்மை, ஜனநாயகம் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிராக அலை வீசிவருகிறது’ என்றார்.

தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், ‘எங்கள் இருவரிடையே எந்த பிரச்சினையும் இல்லை. அண்ணன் வைகோவுடன் 30 ஆண்டுகாலமாக நட்பில் இருந்துவருகிறேன். நினைத்ததை ஒளிவுமறைவின்றி பேசக்கூடியவர். ராகுல்காந்தியிடம் மோடி திணறி வருகிறார்’ என்றார்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் வைகோ நிருபர்களிடம் கூறும்போது, ‘‘மாநில கட்சிகளின் கூட்டமைப்பும், காங்கிரசும் இணைந்து 2019–ம் ஆண்டு மத்தியில் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் தி.மு.க. அணி வெற்றிபெறும். எந்த கட்சி போட்டியிடும் என்பதை தி.மு.க. தான் முடிவு செய்யும். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதும் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடும்.’’


Next Story