பிளஸ்-2 மாணவி மீது திராவகம் வீசுவதாக மிரட்டிய பெயிண்டர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது


பிளஸ்-2 மாணவி மீது திராவகம் வீசுவதாக மிரட்டிய பெயிண்டர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 11 Dec 2018 10:15 PM GMT (Updated: 11 Dec 2018 8:14 PM GMT)

தஞ்சையில், ஒரு தலைக்காதலால் பிளஸ்-2 மாணவி மீது திராவகம் வீசுவதாக மிரட்டிய பெயிண்டரை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். தாய்-தந்தை இல்லாததால் தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இவரை வாலிபர் ஒருவர், ஒரு தலையாக காதலித்து வந்தார். ஆனால் அந்த மாணவியோ அந்த வாலிபரை காதலிக்க மறுத்து விட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கே சென்ற அந்த வாலிபர், தன்னை காதலிக்க வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு என்று அந்த மாணவியை மிரட்டினார். தாய், தந்தை இல்லாத தனக்கு படிப்பு மட்டுமே ஆதரவு என்று எண்ணிய அவர் காதலை பற்றி சிந்திக்காமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

தன்னை தட்டி கேட்க அந்த பெண்ணின் தரப்பில் யாரும் இல்லை என்று நினைத்த அந்த வாலிபர், தன்னை காதலிக்கும்படி அந்த மாணவியை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் அந்த மாணவி பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த மாணவியை வழிமறித்த வாலிபர், என்னை காதலிக்கும்படி பலமுறை கூறியும், நீ காதலிக்க மறுப்பு தெரிவித்து வருகிறாய். என்னை காதலிக்கவில்லை என்றால் உன் முகத்தில் திராவகத்தை வீசி விடுவேன் என்று மிரட்டி உள்ளார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கம்பியால் அவரை தாக்கவும் முயற்சி செய்துள்ளார்.

இதனால் பயந்துபோன மாணவி என்னை யாராவது காப்பாற்றுங்களேன் என்று சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்ட அந்த பகுதி மக்கள், அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போலீஸ் உதவி மையத்தில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரை தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர், தஞ்சை சீனிவாசபுரம் சேப்பனாவாரி முனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த சகாயராஜ் மகன் அந்தோணி என்கிற சுரேஷ்(வயது 21) என்பதும், இவர் பெயிண்டராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்தோணியை போலீசார் கைது செய்தனர்.

Next Story