மருத்துவக்கல்லூரியில் பரபரப்பு விடுதி மாணவர்களின் ஆடையை களைய செய்து ராக்கிங் சீனியர் மாணவர்கள் மீது புகார்


மருத்துவக்கல்லூரியில் பரபரப்பு விடுதி மாணவர்களின் ஆடையை களைய செய்து ராக்கிங் சீனியர் மாணவர்கள் மீது புகார்
x
தினத்தந்தி 11 Dec 2018 10:15 PM GMT (Updated: 11 Dec 2018 9:27 PM GMT)

நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு விடுதி மாணவர்களின் ஆடையை களைய செய்து சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். கல்லூரி வளாகத்தில் மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதி உள்ளது. இந்த விடுதிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முன்னாள் மாணவர் ஒருவர் கல்லூரி விடுதிக்கு வந்தார். அவர் 4-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுடன் சேர்ந்து முதலாம் ஆண்டு விடுதி மாணவர்களை ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது முதலாம் ஆண்டு மாணவர்களின் ஆடையை களைய செய்தும், பல்வேறு செய்கைகளை செய்ய வலியுறுத்தியும் துன்புறுத்தியதாக தெரிகிறது. இந்த ராக்கிங் கொடுமை இரவில் இருந்து அதிகாலை வரை விடிய-விடிய தொடர்ந்து நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேற்று காலையில் கல்லூரி டீன் (பொறுப்பு) நாராயணன் மற்றும் பேராசிரியர்களிடம் புகார் அளித்தனர். புகாரை படித்து பார்த்த கல்லூரி டீன் மற்றும் பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ராக்கிங் கொடுமை குறித்து விசாரணை நடத்த மருத்துவ பேராசிரியர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து டீன் உத்தரவிட்டார்.

ராக்கிங் கொடுமைக்கு காரணமான முன்னாள் மாணவர் சென்னையை சேர்ந்தவர் என்றும், நாகர்கோவிலில் ஒரு பேராசிரியரின் வீட்டில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் மாணவர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்தது எப்படி? அவருக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. எனவே அந்த மாணவர் மீது போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று முதலாம் ஆண்டு மாணவர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி டீன் (பொறுப்பு) நாராயணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கல்லூரி விடுதி மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது. அந்த புகார் தொடர்பாக விசாரிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முடிந்த பிறகுதான் இதில் உள்ள உறுதியான தகவல்களை தெரிவிக்க முடியும். அதுவரை நான் எதுவும் சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ராக்கிங் கொடுமைக்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் ராக்கிங் கொடுமை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story