போலீஸ் ஏட்டு மண்டை உடைப்பு: 3 பேர் மீது கொலை முயற்சி வழக்கு


போலீஸ் ஏட்டு மண்டை உடைப்பு: 3 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
x
தினத்தந்தி 11 Dec 2018 10:15 PM GMT (Updated: 11 Dec 2018 9:33 PM GMT)

களியக்காவிளை அருகே ஏட்டு மண்டை உடைப்பு தொடர்பாக 3 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடிவருகிறார்கள்.

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே உள்ள பளுகல் கூனம்பனை பகுதியில் கேரள எல்லையையொட்டி ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் 75-வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 2-ந்தேதி முதல் கலைநிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை கச்சேரி நடைபெற்று வருகிறது.

இந்த பள்ளியில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் மைதானம் தமிழக எல்லைக்குள் வருவதால் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்காக பளுகல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் நித்திரவிளையை சேர்ந்த கணேஷ்குமார்(வயது 40) தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சம்பவத்தன்று இரவு 10 மணியை கடந்தும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பள்ளியின் நிர்வாகிகளை சந்தித்து நிகழ்ச்சியை விரைவாக முடிக்கும்படி கூறினார்.

இதனால், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென வாக்குவாதம் மோதலாக மாறியது. போலீசாரிடம் மோதலில் ஈடுபட்டவர்களை ஏட்டு கணேஷ்குமார் மைதானத்தில் இருந்து வெறியேற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது, திடீரென கூட்டத்தில் இருந்து ஏட்டு மீது கற்கள் வீசப்பட்டன. இதில் ஏட்டு கணேஷ்குமாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் அவர், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

உடனே அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், கேரள மாநிலம் வண்டித்தடம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்(32), காரக்கோணம் பகுதியை சேர்ந்த வின்ஸ், ஷாஜி ஆகிய 3 பேர் போலீஸ் ஏட்டு மீது கற்களை வீசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றது தெரியவந்தது. அதன்பேரில் ராஜேஷ் உள்பட 3 பேர் மீதும் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு கேரளாவில் பதுங்கி உள்ள 3 பேரையும் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Next Story