புயல் நிவாரணம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு: போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்


புயல் நிவாரணம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு: போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2018 10:45 PM GMT (Updated: 12 Dec 2018 8:18 PM GMT)

புயல் நிவாரணம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்து மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுந்தரக்கோட்டை,

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீதும், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை கண்டித்தும், வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும் மன்னார்குடி பெரியார் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

கோஷங்கள்

ஒன்றிய செயலாளர் வீரமணி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாலாபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் நாகேஷ், சுப்பிரமணியன், இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய செயலாளர் பாப்பையன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சதாசிவம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வம், மாதர் சங்க ஒன்றிய தலைவர் வனிதாதேவி, ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஈஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டு போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.


Next Story