பஸ் கண்டக்டர் வீட்டில் நகை திருட்டு: பிரபல திருடன் கைது
கோபி அருகே பஸ் கண்டக்டர் வீட்டில் நகை திருடிய பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர்.
கடத்தூர்,
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 32). அரசு பஸ் கண்டக்டர். இவர் பின்னர் 23–ந் தேதி மீண்டும் ஒத்தக்குதிரையில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகையையும் காணவில்லை. மேலும் பொருட்களும் சிதறிக்கிடந்தன.
வீட்டில் ஆள் இல்லை என்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 10 பவுன் நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிலம்பரசன் கோபி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் கோபி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், ஏட்டுகள் சிவக்குமார், ஜவகர் ஆகியோர் நேற்று காலை கோபி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் ஒருவர் நடந்து வந்து கொண்டு இருந்தார். இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர், சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த மனோஜ் (30) என்பதும், இவர்தான், கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரையை சேர்ந்த சிலம்பரசனின் வீட்டில் 10 பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது. மேலும் மனோஜ் மீது சேலம், புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 10 பவுன் நகையையும் பறிமுதல் செய்யப்பட்டது.