காங்கேயம் இன காளைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


காங்கேயம் இன காளைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 13 Dec 2018 11:00 PM GMT (Updated: 13 Dec 2018 8:39 PM GMT)

அழிந்து வரும் காங்கேயம் இன காளைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மூலனூர்,

காளைகள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது காங்கேயம் இன காளைகள்தான். அதன் தோற்றம், கம்பீரம், நடை, உடல் அமைப்பு, குறிதப்பாத விழிகளை கொண்ட நேர்கொண்ட பார்வை, ஆகா... எத்தனை அழகு. இந்த காளைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. கொங்கு மண்டல விவசாயிகள் வீட்டில் ஆடம்பர பொருட்கள் இருக்கிறதோ? இல்லையோ? காங்கேயம் இன காளைகள் நிற்பதை பெருமையாக கருதுகிறார்கள். மேலும் தங்களது வீடுகளில் வளர்க்கும் காளைகளை வீட்டின் ஒருவராகவே கருதுகிறார்கள்.

காங்கேயம் காளைகள் இல்லாத விவசாயிகள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு விவசாயிகளின் வீடுகளில் காங்கேயம் இன காளைகள் கோலோச்சின. ஆனால் காலப்போக்கிலும், எந்திரங்களில் வரவாலும், வறட்சியின் காரணமாகவும் காங்கேயம் இன காளைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. காங்கேயம் இன கால்நடை சந்தைகள் ஆங்காங்கே நடந்தாலும், அந்த சந்தைக்கு வரும் காங்கேயம் இனமாடுகளின் எண்ணிக்கை முன்போல இல்லை. எனவே காங்கேயம் இன காளைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. எனவே காங்கேயம் இன காளைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுபற்றி மூலனூரை அடுத்த புஞ்சைத்தலையூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் நடராஜ் கூறியதாவது:–

உலக அளவில் புகழ் பெற்றது காங்கேயம் இன காளைகள், பசு மாடுகள். இந்த இன காளைகள், மாடுகள் கடும் வறட்சியை தாங்கி வாழக்கூடியது. குறைவான தீவனங்கள் தின்று அதிக நேரம் சோர்வு இல்லாமல் உழைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட இந்த காளைகள் மூன்று டன் பொதியை வண்டியில் கட்டி அசராமல் இழுத்து செல்லும்.

பால் குறைவாக கொடுத்தாலும் அது சத்து மிக்கது. பாலில் அதிக சுவை இருக்கும். கொங்கு பகுதியில் திருமணம் நடந்தால் சீதனமாக இந்த இனபசு மாடுகளை பெண் வீட்டார் கொடுப்பது வழக்கம். இன்றளவும் இந்த வழக்கம் இந்த பகுதியில் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் இந்த மாட்டின் பாலை குடித்து அதிக உடல் ஆரேக்கியத்துடன் இருக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை. இதுவே இந்த மாட்டின் பெருமை.

தற்போது இந்த இன காளைகள், மாடுகள் மிகவும் குறைந்து வருகிறது. விவசாயிகள் இந்த இன மாடுகளை வளர்க்க ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் இந்த மாடுகளை வளர்க்க அதிகம் தீவன செலவு ஆவதாலும், விவசாய பணிகளுக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், இந்த காளைகளை வளர்க்க யாரும் விருப்பம் காட்டுவதில்லை. காங்கேயம் இன காளைகளை விற்பனை செய்ய காங்கேயம் அருகே கண்ணபுரம் மாட்டு சந்தை ஆண்டு தோறும் கூடி வருகிறது.

முன்பு சுமார் 1 லட்சம் மாடுகள் வரை விற்பனைக்கு வந்தது தற்போது சுமார் 25 ஆயிரம் மாடுகளே விற்பனைக்கு வருகிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தற்போது வெளிநாட்டு மாடான சிந்து, ஜெர்சி மாடுகளை விவசாயிகள் அதிகம் வளர்த்து வருகின்றனர். இந்த மாடுகள் கடும் கோடை வெப்பத்தை தாங்கி வாழக்கூடியது அல்ல. பராமரிப்பும் செலவு அதிகம். எனவே காங்கேயம் இன மாடுகளை வளர்க்க போதிய விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்த வேண்டும். அழிந்து வரும் இந்த இன காளைகள், பசு மாடுகளை வளர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த இன மாடுகளை வளர்க்க மானியம் வழங்கப்பட்டு வந்ததால் இந்த இன மாடுகள் ஏராளமாக பெருகின. எனவே இந்த மாடுகள் இனத்தை பெருக்க உரிய முயற்சியை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story