திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டர்களுடன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாக்குவாதம்


திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டர்களுடன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 15 Dec 2018 10:45 PM GMT (Updated: 15 Dec 2018 9:35 PM GMT)

திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் டாக்டர்களுடன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை, காய்ச்சல், எலும்பு முறிவு, தீக்காயம் உள்பட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் உள்ளன. விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவில் எப்போதும் நோயாளிகள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஆம்புலன்சுகளில் கொண்டுவரப்படும் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் விதமாக எப்போதும் ‘ஸ்டிரெச்சர்’ தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும்.

இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் சில்வார்பட்டியில் நடந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக் காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

ஆம்புலன்சில் இருந்து அந்த மூதாட்டியை இறக்கிய நிலையில், அவரை மருத்துவமனைக் குள் கொண்டு செல்வதற்கு அங்கு ‘ஸ்டிரெச்சர்’ இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் கேட்டுள்ளனர். அவர் கள் ஆம்புலன்சில் உள்ள ‘ஸ்டிரெச்சர்’ மூலமே, அந்த மூதாட்டியை மருத்துவமனைக்குள் கொண்டு வந்து அனுமதிக்கும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் 108 ஊழியர்களுக்கும், டாக்டர் களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஸ்டிரெச்சர் இல்லாததால் சிகிச்சைக் காக கொண்டுவரப்பட்ட மூதாட்டி, மருத்துவமனை வளாகத்திலேயே அரை மணி நேரத்துக்கும் மேலாக தவித்தார். பின்னர் அவரை 108 ஊழியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து 108 ஊழியர்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே தயார் நிலையில் ஸ்டிரெச்சர்கள் வைக்கப்படுவதில்லை. அந்த ஸ்டிரெச்சர்களை மருத்துவமனைகளில் உள்ள பொருட்களை வைப்பதற்காக பயன்படுத்துகின்றனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை நாங்களே மருத்துவமனைக்கு உள்ளே கொண்டு அனுமதிக்கும் நிலை இருப்பதால், வேறு விபத்துகளில் காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தனியார் ஆம்புலன்சுகள் மூலம் கொண்டுவருபவர் களை மட்டும், அரசு மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக ஸ்டிரெச்சர் மூலம் உள்ளே கொண்டு சென்று அனுமதிக்கின்றனர். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளிக்க உள்ளோம், என்றனர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 108 ஆம்புலன்சுகளில் கொண்டுவரப்படுபவர்களை அந்த ஊழியர்கள் தான் மருத்துவமனைக்குள் கொண்டு வந்து அனுமதிக்க வேண்டும் என்ற விதிமுறையே உள்ளது. டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது, தேசிய சுகாதார அமைப்பில் புகார் அளிக்க உள்ளோம், என்றார்.


Next Story