ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்: மக்கள் அதிகாரம் அமைப்பினர் 17 பேர் கைது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்: மக்கள் அதிகாரம் அமைப்பினர் 17 பேர் கைது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Dec 2018 11:00 PM GMT (Updated: 17 Dec 2018 7:27 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி,

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை கண்டித்தும், இந்த ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தர்மபுரி பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். கோபிநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடப்பது குறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது போலீசாருக்கும், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாரிடம் உரிய அனுமதி பெறாமல் எப்படி ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று இந்த வாக்குவாதத்தின்போது போலீசார் தரப்பில் கேட்டனர். அதற்கு நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் தருவதில்லை. போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டுதான் மக்கள் பிரச்சினை தொடர்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story