பெரம்பலூர், அரியலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர், அரியலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2018 10:45 PM GMT (Updated: 17 Dec 2018 9:02 PM GMT)

பெரம்பலூர், அரியலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்,

கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அலுவலகங்களில் கணினி, இணையதள வசதி போன்ற அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். மாவட்ட அளவிலான பணிமாறுதல், கிராம நிர்வாக அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று உட்பிரிவுகளில் பட்டா வழங்குதல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அதிகாரிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 10-ந் தேதி முதல் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியை புறக்கணித்து காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை.

இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் ரெங்கராஜ், பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து சங்கத்தின் தலைவர் ராஜா நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் திருச்சி உயர் மட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கிராம நிர்வாக அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகவும் செல்ல இருக்கிறோம்.

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பும், வருகிற 21-ந்தேதி காலை அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகளின் கூட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. வருகிற 24-ந் தேதி தொகுதி எம்.எல்.ஏ.விடமும், 26-ந் தேதி எம்.பி.யிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் 27-ந் தேதி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றார்.

இதேபோல் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரியலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். இதில் அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால், அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சாதி, வருவாய், இருப்பிட சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சான்றிதழ்கள் கிடைக்க பெறாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். 

Next Story