அறந்தாங்கி, அரிமளம், அன்னவாசல், கந்தர்வகோட்டை பகுதிகளில் நிவாரணம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்


அறந்தாங்கி, அரிமளம், அன்னவாசல், கந்தர்வகோட்டை பகுதிகளில் நிவாரணம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Dec 2018 10:45 PM GMT (Updated: 17 Dec 2018 9:11 PM GMT)

அறந்தாங்கி, அரிமளம், அன்னவாசல், கந்தர்வகோட்டை பகுதிகளில் நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அறந்தாங்கி,

அறந்தாங்கி அருகே தாந்தாணி, சிதம்பரவிடுதி, எரிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி மக்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் புயல் நிவாரண பொருட்கள் குறைந்த அளவே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புயல் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும்.

இல்லையென்றால், எங்கள் பகுதியில் யாருக்கும் புயல் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டாம் எனக்கூறி அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் எரிச்சி பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன் தலைமை தாங்கினார்.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் வர காலதாமதமானதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையின் நடுவே அடுப்பை வைத்து, டீ போட்டு மறியலில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கினர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் பஞ்சவர்ணம், தாசில்தார் கருப்பையா, அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் மறியலில் ஈடுபட்டவர்கள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாளை (இன்று) நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறிவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல் அரிமளம் ஒன்றியம் வாளரமாணிக்கம் ஊராட்சியில் உள்ள அனிக்கனி, போசம்பட்டி, வாளரமாணிக்கம், ஒச்சான்குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்காமல், மாடி வீடுகளில் வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரியும் போசம்பட்டி விலக்கு ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கே.புதுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் மீண்டும் நிவாரணம் கேட்டு கிராம நிர்வாக அதிகாரியிடம் விண்ணப்பித்தால், நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்கள். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேபோல அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட எட்டாம்மண்டகபடி பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோல அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும், நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் மறியல் தொடங்கி நீண்டநேரமாகியும் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு திருமயம் தாசில்தார் ரமேஷ் மற்றும் அரிமளம் போலீசார் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி கிராமத்தில் நேற்று தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் 27 வகையான நிவாரண பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் ஈடுபட்ட கிராம நிர்வாக அதிகாரி குறிப்பிட்ட சில வீடுகளுக்கு மட்டும் டோக்கன் வழங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். எனவே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் டோக்கன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை கிளிக்குடி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தாசில்தார் சோனை கருப்பையா, அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கந்தர்வகோட்டை அருகே துருசுப்பட்டி கிராமத்தில், புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து கழக அதிகாரி கருப்பையா, வருவாய்த்துறை அதிகாரி ராமசாமி, கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Next Story