விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்காததால் இன்சூரன்சு நிறுவனத்தில் ஜப்தி


விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்காததால் இன்சூரன்சு நிறுவனத்தில் ஜப்தி
x
தினத்தந்தி 17 Dec 2018 11:59 PM GMT (Updated: 17 Dec 2018 11:59 PM GMT)

விபத்தில் படுகாயமடைந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்காததால் இன்சூரன்சு நிறுவனத்தின் பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் சேதுபதி நகரை சேர்ந்த தர்மராஜ் என்பவருடைய மனைவி முனியம்மாள்(வயது 47). நகரசபை துப்புரவு பணியாளரான இவர் கடந்த 2005–ம் ஆண்டு ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு இருந்தபோது அந்த வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

இதில் முனியம்மாள் படுகாயம் அடைந்தார். தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரி முனியம்மாள் ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2007–ம் ஆண்டு நியூ இந்தியா இன்சூரன்சு நிறுவனம் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தொகையை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து ரூ.82 ஆயிரத்து 974 வழங்க உத்தரவிடக்கோரி முனியம்மாள் கோர்ட்டில் நிறைவேற்றக்கோரும் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவப்பிரகாசம் இழப்பீடு வழங்காததால் இன்சூரன்சு நிறுவனத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதன்படி கோர்ட்டு ஊழியர் ரவிச்சந்திரன், வக்கீல் செல்வராஜ், ஜெயமுருகன் உள்ளிட்டோர் இன்சூரன்சு நிறுவனத்திற்கு சென்றனர். கோர்ட்டு உத்தரவின்படி அங்குள்ள பொருட்களை ஜப்தி செய்து எடுத்து வைத்தனர். அப்போது இன்சூரன்சு நிறுவன அதிகாரிகள் இழப்பீடு தொகையை ஒரு வார காலத்திற்குள் வழங்குவதாக உறுதி அளித்து காலஅவகாசம் கேட்டனர். இதனை தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்த பொருட்களை ஒப்படைத்துவிட்டு திரும்பி வந்தனர்.

Next Story