மண் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி - டிரைவர் கைது


மண் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி - டிரைவர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2018 10:27 PM GMT (Updated: 18 Dec 2018 10:27 PM GMT)

பேரணாம்பட்டில் மண் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது டிப்பர் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு டவுன் வீ.கோட்டா ரோடு குடியாத்தம் சந்திப்பு சாலை புத்துக்கோவில் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன், ஏட்டு சுப்பிரமணி, சந்தோஷ் ஆகிய 3 பேர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரியை தடுத்து சோதனையிட்டதில் சுமார் 3 யூனிட் முரம்பு மண் ஏற்றிக்கொண்டு உமராபாத் பகுதியில் இருந்து குடியாத்தம் நோக்கி கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் டிப்பர் லாரியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரும்படி உத்தரவிட்டனர்.

ஆனால் டிப்பர் லாரி டிரைவரும், உரிமையாளருமான எம்.வி.குப்பத்தை சேர்ந்த ஆனந்தன் (வயது 34) என்பவர் டிப்பர் லாரியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல மறுத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் டிப்பர் லாரியை வேகமாக இயக்கி பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீஸ்காரர் மீது ஏற்றி கொல்ல முயன்றார்.

உடனடியாக சுதாரித்து கொண்ட போலீசார் அங்கிருந்த இரும்பு பேரிகார்டுகளை வைத்து டிப்பர் லாரியை செல்லாமல் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து லாரி டிரைவர் ஆனந்தனை போலீசார் கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.


Next Story