மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 20 Dec 2018 10:15 PM GMT (Updated: 20 Dec 2018 6:35 PM GMT)

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலியானார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கரீம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 22). இவரது நண்பர் திருத்தணியை சேர்ந்த ரஜினி (22). இவர்கள் இருவரும் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தனர்.

தங்களது பயிற்சி முடிந்து நேற்று நடந்த தேர்வில் கலந்துகொள்ள மோட்டார் சைக்கிளில் அவர்கள் இருவரும் கும்மிடிப்பூண்டி நோக்கி சென்றனர்.

பெரியபாளையம்-ஆரணி நெடுஞ்சாலையில் ஆரணி சமுதாயகூடம் அருகே செல்லும்போது ஆரணியில் இருந்து சென்ற வேனை டிரைவர் செல்போனில் பேசியபடி சமுதாய கூடம் அருகே திடீர் என்று சாலையின் வலதுபுறம் வேனை திருப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் எதிரில் வந்த மோட்டார் சைக்கிளின் மீது வேன் மோதி அதன் பின்னர் லாரி மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் வேனுக்கும், லாரிக்கும் இடையே சிக்கிக்கொண் டது. அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடிய சந்திரசேகர், ரஜினி இருவரையும் மீட்டு பெரியபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

தகவல் அறிந்த ஆரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வேன், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சந்திரசேகர், ரஜினி ஆகியோரை பெரியபாளையத்தில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில், சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். ரஜினி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story