பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அதிகாரிகள் முற்றுகை


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அதிகாரிகள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Dec 2018 10:15 PM GMT (Updated: 21 Dec 2018 9:22 PM GMT)

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி கரூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம நிர்வாக அதிகாரிகளின் போராட்டம் நடைபெற்றது.

கரூர்,

கரூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கூடுதல் கிராம நிர்வாகத்தினை கவனிக்கும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்கிட வேண்டும், அடங்கல், பிறப்பு-இறப்பு சான்றிதல் உள்ளிட்டவற்றை கணினியில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு அதிகவேக இணையதள சேவையுடன் கூடிய கணினி வழங்கிட வேண்டும், உட்பிரிவு பட்டா மாறுதல் உள்பட அனைத்து விதமான பட்டா மாறுதல்களிலும் கிராம நிர்வாக அதிகாரியின் பரிந்துரையை கட்டாயமாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அந்த சங்கத்தினர், நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர்சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் மாவட்ட செயலாளர் மங்கையர்கரசி, மாவட்ட பொருளாளர் முத்துபிரியன் உள்பட கிராம நிர்வாக அதிகாரிகள் கோஷம் எழுப்பியபடியே கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டம் நடத்திய 24 பேரை கைது செய்து, தாந்தோன்றிமலையிலுள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

Next Story