கஜா புயலால் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை விரைவில் சீரமைக்க வேண்டும் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


கஜா புயலால் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை விரைவில் சீரமைக்க வேண்டும் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Dec 2018 10:45 PM GMT (Updated: 21 Dec 2018 11:05 PM GMT)

கஜா புயலால் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை விரைவில் சீரமைக்க வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொதுக்குழு கூட்டம் நாகையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் உஷா, செயலாளர் லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக துணை செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். வட்டார செயலாளர் பாலசண்முகம் பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சம்பத் கமிஷன் பரிந்துரையை புறக்கணித்து ஒரே வளாகத்தில் உள்ள 2 பள்ளிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். அரசாணை 101 அமல்படுத்தியதால் ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு, தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை தொடர்பான பணபயன்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது பாராட்டுக்குரியது. அங்கன்வாடிகளில் தொடங்கப்பட உள்ள மழலையர் வகுப்புகளில் அதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்து, புதிய வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும். கஜா புயலால் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை விரைந்து சீரமைக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார், நகர தலைவர் இளமுருகு, செயலாளர் இளமாறன், பொருளாளர் செந்தில்குமார், திருமருகல் வட்டார செயலாளர் ஆன்ட்ரூஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் தனுசுமணி நன்றி கூறினார்.


Next Story