கூலி உயர்வு கேட்டு போராடிய 44 பேர் எரித்துக்கொல்லப்பட்ட 50-வது ஆண்டு நினைவு தினம் கீழவெண்மணியில் 25-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது


கூலி உயர்வு கேட்டு போராடிய 44 பேர் எரித்துக்கொல்லப்பட்ட 50-வது ஆண்டு நினைவு தினம் கீழவெண்மணியில் 25-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது
x
தினத்தந்தி 22 Dec 2018 10:45 PM GMT (Updated: 22 Dec 2018 8:45 PM GMT)

கீழவெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய 44 பேர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட 50-வது ஆண்டு நினைவு தினம் 25-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் கீழவெண்மணி கிராமம் உள்ளது. விவசாயக் கூலித்தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் அப்போதைய நில உரிமையாளர்களுக்கும் கூலித்தொழிலாளர்களுக்கும் நீண்ட காலமாக சம்பள உயர்வு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. அப்போது தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒருபடி நெல் மட்டுமே கூலியாக வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கூடுதலாக ஒரு படி நெல் கேட்டு தொழிலாளர்கள் போராடி வந்தனர். கூடுதலாக ஒரு படி நெல் கொடுக்க மறுத்த நில உரிமையாளர்கள் வெளியூர்களில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து விவசாய பணிகளை செய்தனர். இதை உள்ளுர் தொழிலாளர்கள் தட்டிக்கேட்டனர்.

இந்தநிலையில் கடந்த 1968-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி கீழவெண்மணியில் ஒரு வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த 2 தொழிலாளர்களை அப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் மீட்டு வந்தனர். அப்போது நிலஉரிமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது உயிர் தப்பினால் போதும் என்று நினைத்த கூலி தொழிலாளர்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். இவ்வாறு ஓடியவர்களில் ஒரு பகுதியினர் ஊரின் கடைசி பகுதியில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் குடிசையை வெளிப்புறமாக பூட்டி விட்டு குடிசைக்கு தீ வைத்தது. இதில் குடிசைக்குள் பதுங்கியிருந்த 20 பெண்கள், 19 குழந்தைகள், 5 ஆண்கள் என 44 பேர் உடல் கருகி இறந்தனர்.

நாடெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த போது கீழவெண்மணியில் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்தது மறுநாள் தான்(1968-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி) வெளி உலகிற்கு தெரிய வந்தது. கூடுதலாக ஒருபடி நெல் கேட்டதற்காக 44 பேர் எரித்துக்கொல்லப்பட்ட நிகழ்வை கம்யூனிஸ்டு கட்சியினர் ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந் தேதி வர்க்க ஒற்றுமை தியாகிகள் நினைவு தினமாக அனுசரித்து வருகின்றனர். 44 தொழிலாளர்கள் எரித்துக்கொல்லப்பட்ட குடிசை வீட்டை நினைவிடமாக கட்டி அதனுள் வாழைமொட்டு போன்று நினைவு சின்னம் அமைத்து ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொழிற்சங்கத்தினர் இணைந்து கீழவெண்மணியில் பல கோடி ரூபாய் செலவில் 44 அடி உயரத்தில் புதிய நினைவிட கட்டிடத்தை பிரமாண்டமாக அமைத்து வருகின்றனர்.

25-ந் தேதி(செவ்வாய்க் கிழமை) நாகை மாவட்டம் கீழவெண்மணியில் 44 தொழிலாளர்கள் எரித்துக்கொல்லப்பட்ட 50-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

Next Story