தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 180 கிலோ கஞ்சா பறிமுதல் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 180 கிலோ கஞ்சா பறிமுதல் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Dec 2018 10:15 PM GMT (Updated: 28 Dec 2018 2:44 PM GMT)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 180 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 180 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவல்

தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆணையர் ஜெயபாரதி மேற்பார்வையில், ராமநாதபுரம் சுங்கத்துறை சூப்பிரண்டு முனியசாமி தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். வேம்பார் அருகே உள்ள கட்டப்பாடு என்னும் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.

180 கிலோ கஞ்சா பறிமுதல்

அப்போது அங்கு ஒரு லாரி வந்தது. அதில் இருந்து இறங்கிய 2 பேர் லாரியில் இருந்து சில மூட்டைகளை கீழே இறக்கினர். உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் 2 பேரும் அங்குள்ள சிறிய ஓடையை தாண்டி தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் லாரியை சோதனை செய்தனர். அப்போது, லாரியின் அடிப்பகுதியில் சில ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த அறைகளில் 6 மூட்டைகளில் 180 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் என்று கூறப்படுகிறது.

இலங்கைக்கு...

மேலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து லாரி மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை தூத்துக்குடி மாவட்டம் கட்டப்பாட்டில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இலங்கைக்கு கடத்த முயன்ற 180 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story