தஞ்சை நீரேற்று நிலையம் அருகே சாலையில் வீணாகும் குடிநீர் - குழாய் உடைப்பு சீரமைக்கப்படுமா?


தஞ்சை நீரேற்று நிலையம் அருகே சாலையில் வீணாகும் குடிநீர் - குழாய் உடைப்பு சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 29 Dec 2018 10:58 PM GMT (Updated: 29 Dec 2018 10:58 PM GMT)

தஞ்சையில் நீரேற்று நிலையம் அருகே சாலையில் குடிநீர் வீணாகி வருகிறது. குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இங்கு தஞ்சை பெரியகோவில், அரண்மனை, சிவகங்கை பூங்கா, அருங்காட்சியகம் போன்ற சுற்றுலா தலங்களும் உள்ளன. தஞ்சை மாநகரில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். தஞ்சை மாநகராட்சி வார்டுகளுக்கு, தஞ்சை அருகே திருமானூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக திருமானூரில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் தஞ்சையில் வெண்ணாற்றங்கரையில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அங்கு குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, குளோரின் கலந்து தஞ்சையில் உள்ள பல்வேறு நீரேற்று நிலையங்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது தவிர தஞ்சை மாநகரில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சை வெண்ணாறு நீரேற்று நிலையத்தில் இருந்து தஞ்சை கணபதி நகரில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இந்த நீரேற்று நிலையம் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இங்கிருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள பகுதிகள், சிவாஜிநகர், கணபதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நீரேற்று நிலையத்தின் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. 2 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையில் நீண்ட தூரத்துக்கு குடிநீர் வழிந்தோடுகிறது. உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக குடிநீர் குழாய்க்குள் குப்பைகள் செல்ல வாய்ப்பு உள்ளது.

எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக இதனை பார்வையிட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story