அருமனை அருகே கோவில் விழாவில் பங்கேற்ற 3 யானைகள் பறிமுதல்


அருமனை அருகே கோவில் விழாவில் பங்கேற்ற 3 யானைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Dec 2018 10:45 PM GMT (Updated: 30 Dec 2018 8:05 PM GMT)

அருமனை அருகே கோவில் விழாவில் பங்கேற்ற 3 யானைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அருமனை,

குமரி மாவட்டம் அருமனை அருகே அழப்பன்கோடு தர்ம சாஸ்தா கோவிலில் திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பள்ளிவேட்டை ஊர்வலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக கேரளாவில் இருந்து 3 யானைகள் வரவழைக்கப்பட்டன. பொதுவாக யானைகளை ஊர்வலத்தில் பங்கேற்க செய்யவும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவும் வனத்துறை உள்பட பல்வேறு அமைப்புகளில் இருந்து அனுமதி பெற வேண்டும் என பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், இந்த 3 யானைகளும் குமரி மாவட்ட வனத்துறையின் அனுமதியின்றி கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது.

விழா முடிந்த பின்பு நேற்று 3 யானைகளையும் லாரிகளில் ஏற்றி கேரளாவை நோக்கி புறப்பட்டனர். கேரள-குமரி எல்லையான செரியகொல்லா சோதனை சாவடியில் சென்ற போது குமரி மாவட்ட உதவி வனபாதுகாவலர் சானவாஸ்கான் மற்றும் அதிகாரிகள் லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, உரிய அனுமதி சான்று இன்றி யானைகளை அழைத்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து 3 யானைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட யானைகள் கேரள வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story