புத்தாண்டு தினத்தையொட்டி தேவாலயங்கள்-கோவில்களில் சிறப்பு வழிபாடு


புத்தாண்டு தினத்தையொட்டி தேவாலயங்கள்-கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 1 Jan 2019 10:30 PM GMT (Updated: 1 Jan 2019 9:09 PM GMT)

புத்தாண்டு தினத்தையொட்டி தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

கரூர், 

ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி நேற்று கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள புனித தெரசம்மாள் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது அனைத்து மக்களின் வாழ்விலும் துன்பம் உள்ளிட்ட இருள் நீங்கி, புத்துணர்வு ஏற்பட வேண்டும் என்பதை சுட்டி காட்டும் விதமாக பங்கு மக்கள் ஒளிவிளக்கினை கையில் ஏந்தியபடி ஏசுவை நினைத்து ஜெபம் செய்தனர். மேலும் வருகிற காலங்களில் பசுமை, வளமை, செழுமை உள்ளிட்டவற்றால் நாடு முன்னேற்றம் காண வேண்டும் என்கிற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் பிடித்திருந்தனர். பின்னர் பங்கு தந்தை ராயப்பன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

அப்போது பாதிரியார்கள் புத்தாண்டு வாழ்த்து கூறி நற்செய்தி வழங்கினர். அதனை தொடர்ந்து புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். மேலும் தேவாலய வளாகத்தில் இளைஞர்கள் பலர் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர்.

இதே போல், கரூர் சர்ச்கார்னரில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயம், புலியூர் குழந்தை ஏசு தேவாலயம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள தேவாலயங்களுக்கு கிறிஸ்தவர்கள் சென்று புத்தாண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் பல இடங்களில் வெடிக்கப்பட்டன. மேலும் இளைஞர்கள் கரூரின் முக்கிய வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக சென்று புத்தாண்டு வாழ்த்துகளை... பொதுமக்களுக்கு தெரிவித்து சென்றதை காண முடிந்தது. இதைக்கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மெதுவாக சென்று, விபத்துகளை தடுக்க முன்வருமாறு அறிவுறுத்தினர்.

கரூர் பஸ் நிலையம் அருகே மனோகரா கார்னரில் போலீஸ் சார்பில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் கலந்து கொண்டு கேக் வெட்டினார். மேலும் பொதுமக்களுக்கு கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது போலீசார், பொதுமக்கள் உள்ளிட்டோர் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், பாரதி, துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புத்தாண்டு பிறப்பையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கல்யாண வெங்கடரமண சாமி கோவில், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரா கோவில், வெண்ணைமலை முருகன் கோவில், ரெங்கநாதசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் புத்தாண்டினை வரவேற்கும் விதமாக பெரும்பாலானோர் நள்ளிரவில் தங்களது வீட்டு முன்பு கோலமிட்டனர். பின்னர் அக்கம், பக்கத்தினருக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டினை கொண்டாடி னர்.

லாலாபேட்டை கடைவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி மாரியம்மனுக்கு பால், பழம், விபூதி உள்பட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மனுக்கு ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது.

தொடர்ந்து ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குளித்தலையில் உள்ள பிரசித்திபெற்ற கடம்பவனேசுவரர், நீலமேகப்பெருமாள், மகா மாரியம்மன் கோவில், அய்யப்பன் கோவில், அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர் உள்ளிட்ட குளித்தலை மற்றும் இதைச்சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் அந்தந்த ஊர் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேலும் சிலர் தாங்கள் வாங்கிய புதிய வாகனங்களை கோவிலுக்கு கொண்டுவந்து பூஜை செய்தனர்.

இதேபோல் குளித்தலை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் வகையில் குளித்தலை பகுதியில் பல்வேறு தெருக்களில் சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பட்டாசு வெடித்தும், கேக்குகள் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடி வரவேற்றனர்.

புத்தாண்டையொட்டி வேலாயுதம்பாளையம் முல்லை நகரில் உள்ள இந்திய சுவிஷே திருச்சபை உலக ரட்சகர் ஆலயத்தில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தனர். சபை போதகர் குமார் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை தொடங்கி நடந்தது. வேலாயுதம்பாளையம் கரூர்-சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு பங்குந்தை அருள்உபகாரம் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. இதே போல், வேலாயுதம்பாளையம் ஹைஸ்கூல் மேடு பகுதியில் உள்ள பெந்தகோஸ் ஆலயத்தின் போதகர் டேவிட்ராஜன் தலைமையிலும், புகளூர் மெயின் ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துவநாதர் ஆலயத்தில் சபை போதகர் பாஸ்கர் தலைமையிலும், புஞ்சை தோட்டக்குறிச்சி தளவாபாளையம் பிலிப் நகரில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சபை போதகர் ஜான்துரை தலைமையிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

வேலாயுதம்பாளையம் புகழிமலை முருகன் கோவில், மாரியம்மன் கோவில், காகிதபுரம் வல்லபை கணபதி ஆகிய கோவில்களில் நேற்று காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மற்றும் இரவு 7 மணி ஆகிய 3 வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்தனர். 

Next Story