கூத்தாநல்லூர், கோட்டூரில் நிவாரண பொருட்கள் கேட்டு கிராமமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு


கூத்தாநல்லூர், கோட்டூரில் நிவாரண பொருட்கள் கேட்டு கிராமமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 2 Jan 2019 11:00 PM GMT (Updated: 2 Jan 2019 6:49 PM GMT)

கூத்தாநல்லூர், கோட்டூரில் நிவாரண பொருட்கள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரை கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அந்த கிராமத்தை சேர்ந்த சிலருக்கு நிவாரண பொருட்கள் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று சேகரை என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கூத்தாநல்லூர் வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் விடுபட்டவர்களுக்கும் நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் லெட்சுமாங்குடி-கொரடாச்சேரி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல ஆதிச்சபுரம் ஊராட்சியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி நேற்று கம்பன்குடி ஆர்ச் பகுதியில் கிராமமக்கள் மற்றும் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள், அரசு அதிகாரிகள் நேரில் வந்து உறுதியளிக்கும் வரை சாலை மறியலை கைவிடமாட்டோம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story