அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை


அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 2 Jan 2019 10:30 PM GMT (Updated: 2 Jan 2019 8:29 PM GMT)

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பொங்கல் பண்டிகையையொட்டி உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழா வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதுதவிர ஜல்லிக்கட்டுக்கு பெயர்பெற்ற மதுரை அவனியாபுரத்தில் 15-ந் தேதியும், பாலமேட்டில் 16-ந் தேதியும் நடைபெற உள்ளது.

தற்போது அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வாடிவாசலுக்கு வர்ணம் தீட்டும் பணி, பந்தல் அமைத்தல், பார்வையாளர்கள் இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர். இதுதவிர காளைகளுக்கு தீவிர பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாடுபிடி வீரர்களும் போட்டிக்காக தயாராகி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை, கால்நடை டாக்டர்களால் நடைபெறும். டாக்டர்களின் தகுதிச்சான்று பெற்ற காளைகள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படும். அதன்படி நேற்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்காக மருத்துவ பரிசோதனை முகாம் தொடங்கியது. அங்குள்ள பஸ் நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் இந்த முகாம் நடந்தது. மண்டல இணை இயக்குனர் ராஜசேகரன் ஆலோசனையின் பேரில் உதவி இயக்குனர் திருவள்ளுவர் மேற்பார்வையில் அலங்காநல்லூர் அரசு கால்நடை உதவி மருத்துவர் ராஜா தலைமையிலான மருத்துவக்குழுவினர் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்தனர்.

ஜல்லிகட்டு காளைகளுக்கு 2 வயது முதல் 8 வயதிற்குள் 2 பல் இருக்க வேண்டும். காளைகளின் உயரம் குறைந்தபட்சம் 120 செ.மீ. இருக்க வேண்டும். காளைகளுக்கு காயத்தழும்பு, நோய் அறிகுறி, வால் முறிவு, கொம்பு முறிவு, கழிச்சல் நோய் போன்றவை இருக்கிறதா? என்றும், உடல் தகுதி திடகாத்திரமாக இருக்கிறதா? என்றும் கால்நடை மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

காளைகளின் உரிமையாளர்களிடம் இருந்தும் சில ஆவணங்கள் கேட்கப்பட்டன. அதாவது ஆதார் கார்டு, மாட்டுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்கள், ரேஷன் கார்டு, தொலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் பிறகு காளைகளுக்கு உடல் தகுதி சான்று வழங்கப்பட்டது.

நேற்று காலையில் இருந்து மாலை வரை 100-க்கும் மேற்பட்ட காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு, ஜல்லிக்கட்டுக்கு பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து இந்த முகாமுக்கு காளைகள் அழைத்து வரப்பட்டு இருந்தன. இந்த பரிசோதனை முகாம் வருகிற 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

Next Story