“சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் பினராயி விஜயன் செயல்படுகிறார்” எச்.ராஜா குற்றச்சாட்டு


“சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் பினராயி விஜயன் செயல்படுகிறார்” எச்.ராஜா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Jan 2019 11:15 PM GMT (Updated: 5 Jan 2019 7:56 PM GMT)

“சபரி மலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் பினராயி விஜயன் செயல்படுகிறார்” என எச்.ராஜா குற்றம்சாட்டினார்.

திருச்சி,

இடதுசாரி சிந்தனையும், நாத்திக சிந்தனைகளும் இந்த நாட்டின் அறிவு களஞ்சியங்களை அழித்திருக்கின்றன. இந்த நாத்திக, கம்யூனிச, தீய சக்திகள் தான் கொஞ்சம், கொஞ்சமாக இந்து கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை அழிக்க வேண்டும் என்று தீய நோக்கத்தோடு செயல்படுகின்றன.

மதமாற்றம், தீய சக்திகளின் பிரதிநிதியாக இருக்கின்ற கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மோசடியாக சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. நாத்திகர்கள், தீய எண்ணம் கொண்டவர்கள் அய்யப்பன் கோவிலை ஒரு ‘ரிசார்ட்’ ஆக நடத்த வேண்டும் என நினைக்கின்றனர்.

பிரவம் தேவாலயத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கேரள அரசு செயல்படுத்தவில்லை. பள்ளிவாசல்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது என தீர்ப்பு உள்ளது, ஆனால் அதனை எடுக்கவில்லை. தீய நோக்கத்தோடு இந்து மதத்தை அழிப்பதற்காக மதமாற்ற தீய சக்திகளோடு சேர்ந்து செய்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்திலும் இந்து புனித தலங்கள், கோவில்கள் இருக்கிற இடத்தில் மாற்று மதத்தினர் தீயநோக்கத்தோடு அதனை ஆக்கிரமிக்கின்றனர். இதேபோல கேரளாவில் கிறிஸ்தவ மதமாற்ற சக்திகளிடம் சபரிமலையை ஒப்படைப்பதற்காக ஒரு தீய நோக்கத்தோடு செயல்படுகிற பினராயி விஜயனின் செயலை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது. பா.ஜ.க.வின் இந்த போராட்டம் தொடரும்.

பள்ளிவாசல்களில் பெண்கள் செல்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதுவும் சொல்லவில்லை. காரணம் மதம் சார்ந்ததில் மதங்கள் முடிவு செய்துகொள்ளும், நீதிமன்றம் அல்ல. இதனை மக்கள் தெளிவாக புரிந்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை கேட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “தேர்தல் ஆணையம் தன்னாட்சி உரிமம் பெற்றது. அதனை அவர்கள் கவனிப்பார்கள்” என்றார். 

Next Story